அந்த இரவு கடந்த பிறகு மருத்துவமனையின் நேரம் சூர்யாவுக்குப் புதிய அர்த்தம் கொடுத்தது. முன்னெல்லாம் ஒவ்வொரு நொடியும் அவனைச் சிதைத்துக் கொண்டிருந்த அந்த இடம், இப்போது அவன் நம்பிக்கையைப் பிடித்து நிற்கும் இடமாக மாறத் தொடங்கியது.
ஹ்ருதயாவின் கை அவன் கையில் பிடித்தபடி, அவன் ஒவ்வொரு மூச்சையும் அவளோடு சேர்த்து உள்ளிழுத்தான் . அவள் இன்னும் மயக்கத்தில் இருந்தாலும், அந்த மௌனத்துக்குள் ஏதோ ஒன்று மெல்ல அசைவதை அவன் உள்ளுணர்வு உணர்ந்ததியது.
மூன்று மாதங்களாக உயிர் மட்டும் தாங்கி நிற்கும் அந்த உடல், இனி மனமும் திரும்ப வர முயற்சி செய்கிறது போல அவனுக்குத் தோன்றியது.
காலை நேரத்தில் மருத்துவர்கள் வழக்கம்போல அவளைப் பரிசோதித்த போது, எண்ணிக்கைகளில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. ஆனால் அவர்களின் பார்வையில் இருந்த சிறிய கவனம் சூர்யாவின் கண்களில் தவறவில்லை.
அவளின் உடல் தன்னிச்சையாக சில பதில்களை அளிக்கத் தொடங்கியிருந்தது. அது பெரும் மாற்றமல்ல; ஆனாலும் முழுமையான மௌனமும் இல்லை. அந்த இடைவெளியில் தான் சூர்யா உணர்ந்தான்—அவள் நினைவு திரும்புகிறாள்.
எப்போதும் ஒரே நாளில் நடப்பதில்லை; மெதுவாக, சின்ன சின்ன சைகைகளாகவே ஆரம்பிக்கும் என்று.
அவன் மீண்டும் அவள் அருகே அமர்ந்தபோது, அவள் முகம் முன்பைவிட சற்று அமைதியாக இருந்தது. அவள் விரல்கள் அவனது விரலை மிகச் சிறிய அளவில் சுற்றிய அந்த நொடி, அவன் இதயத்தை நடுங்க வைத்தது.
அது தற்செயலான அசைவா, அல்லது அவனை உணர்ந்த செயற்பாடா என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனாலும் அந்த ஒரு நொடி அவன் மூன்று மாத வலிக்குக் கொடுத்த முதல் மருந்து. அவள் திரும்ப வருகிறாள் என்ற எண்ணம் அவன் மனத்தில் உறுதியானது.
அதன்பின் அவள் முகத்தில் தோன்றிய நுண்ணிய மாற்றங்கள், புருவத்தின் சிறிய இழுப்பு, உதட்டின் மெல்லிய அசைவு—இவை அனைத்தும் அவனுக்கு ஒரு மொழியாகவே தெரிந்தது. அவள் பேசவில்லை; அவள் கண் திறக்கவும் இல்லை. ஆனால் அவள் உடல் அவனிடம் “நான்இங்கேதான் இருக்கிறேன்” என்று சொல்ல முயற்சி செய்தது போல அவன் உணர்ந்தான்.
அந்த உணர்வே அவனை மீண்டும் உயிரோடு நிறுத்தியது.
அந்த நாளின் முடிவில், சூர்யாவுக்கு மருத்துவமனை இனி ஒரு பயத்தின் இடமில்லை. காத்திருப்பதற்கான இடம். அவள் விழிப்பதற்கான பயணம் தொடங்கியிருந்தது. எவ்வளவு நேரம் எடுத்தாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு அவன் வந்திருந்தான்.
அவள் திரும்ப வருகிறாள் என்பதே அவனுக்கு போதுமானதாக இருந்தது. அவன் அறிந்திருந்தான்—அடுத்த நாள், அல்லது அடுத்த சில நாள்களில், இந்த மௌனம் முறியடிக்கப்படும். ஆனால் அந்த முறிவு, சந்தோஷத்தோடு சேர்த்து ஒரு பெரிய வலியையும் கொண்டு வரும் என்பதை அவன் அப்போது அறியவில்லை.
மாலை, ICU வாசலின் அமைதியை ஒரு பழகிய நடை சற்றே கலைத்தது. சூர்யாவின் அம்மா மெதுவாக உள்ளே நுழைந்தார். மகனின் முகத்தில் இருந்த சோர்வும் கண்களில் தேங்கியிருந்த வலியும் அவள் பார்வையிலேயே அவருக்கு புரிந்தது.
மூன்று மாதங்களாக அவன் தனியாகச் சுமந்த பயம், குற்ற உணர்வு, நம்பிக்கை—எல்லாமே அந்த நொடியிலே அவருக்குத் தெரிந்தது. அவர் எதுவும் பேசாமல் முதலில் ஹ்ருதயாவைப் பார்த்தார். படுக்கையில் அமைதியாக கிடந்த அவள் முகத்தைப் பார்த்ததும், அவர் கண்ணில் ஒரு நம்பிக்கை மின்னியது.
அவர் சூர்யாவின் அருகே வந்து நின்றார். பையில் வைத்திருந்த விபூதியை எடுத்து, முதலில் ஹ்ருதயாவின் நெற்றியில் மெதுவாக பூசினார். அடுத்ததாக சூர்யாவின் நெற்றியிலும் கைகளிலும் தடவினார். அந்த தொடுதல், பல நாட்களாக கல்லாகி நின்ற அவன் மனசுக்குள் ஒரு சின்ன தளர்ச்சியை கொண்டு வந்தது.
“பயப்படாதே சூர்யா, அவ உன்னோட தயா. உன்னைவிட்டு எங்கையும் போக மாட்டா. இந்த நிலை எல்லாம் தற்காலிகம் தான். சீக்கிரமா சரியாகி வந்துடுவா.”
அவர் சற்று நிமிர்ந்து, ICU விளக்குகளுக்கு நடுவே நின்றபடியே,. “நாளைக்கு நான் நேரா பழனி முருகன் கோவிலுக்கு போனேன். ரொம்ப சக்திவாய்ந்த சாமி. மனசார வேண்டினா கை விட மாட்டார். அவளுக்காகவும், உனக்காகவும் பிரார்த்தனை பண்ணிருக்கிறேன். எல்லாம் நல்லபடியா நடக்கும்.”
அந்த வார்த்தைகளில் சாமியைக் காட்டிலும், ஒரு தாயின் அசைக்க முடியாத நம்பிக்கை அதிகமாக இருந்தது.
சூர்யா எதுவும் பேசவில்லை. ஆனால் அந்த விபூதி நெற்றியில் இருந்தபடியே, அவன் கண்கள் முதன்முறையாக சற்று தளர்ந்தன.
இதுவரை அவன் நம்பிக்கை தனியாக அவன் மனசுக்குள்ளேயே இருந்தது. அந்த நிமிஷத்தில், அவன் வலியைப் பகிர்ந்துக்கொள்ள ஒரு தாய் வந்திருந்தார்.
ஹ்ருதயாவின் கையை இன்னும் இறுக்கமாகப் பிடித்தபடி, அவன் உள்ளுக்குள்ளே மெதுவாக சொல்லிக்கொண்டான்—இந்த காத்திருப்பும் ஒரு நாள் முடியும்; இந்த மௌனமும் ஒருநாள் உடையும் என்று.